www.womanofislam.com

Muslim women's online learning centre




உணவு சமைத்து விற்பனை - Catering and Food Sale


பெரியளவு முதலீடு இல்லாமல் வீட்டில் இருந்தவாறு இலகுவாக சம்பாதிக்க கூடிய தொழில் முறைகளில் ஒன்று உணவு சமைத்து விற்பனை செய்வதாகும்.


பெரியளவில் மூலதனம் தேவை இல்லை. வாய்க்கு ருசியாக சமைக்க கூடிய விதத்தில் கைப்பக்குவம் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.


உங்கள் வீட்டைச் சுற்றி கடைகள், ஹேட்டல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், பெரிய அபார்ட்மென்ட்கள் என்று இருந்தால் ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நல்ல முறையில் வருமானம் உழைக்கலாம்.


எப்படி என்றால் வீட்டில் காலை, இரவு நேரங்களில் இடியப்பம், பிட்டு, தோசை, இட்லி, அப்பம் போன்ற உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய முடியும். பகலில் சோறு சமைத்து விற்பனை செய்யலாம்.


முதலில் சிறியளவில் தொழிலை ஆரம்பியுங்கள். முதலில் பக்கத்து வீடுகளுக்கும், கடைகளுக்கும் சிறு அறிவிப்பு கொடுங்கள். ஹோட்டல்களில் இருந்தும் கடைகளில் இருந்தும் ஆர்டர்கள் கேட்டு பெற்று அவற்றுக்கு தினமும் சமைத்து அனுப்பி வையுங்கள்.


மேலும் உங்கள் கணவரோ, சகோதரரோ, மகனோ வேலை செய்யும் இடங்களில் எவரேனும் தினமும் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு நல்ல ருசியான வீட்டு சாப்பாட்டு சமைத்து தரப்படும் என்று தெரிவித்து அத்தகைய ஆர்டர்களை பெற்றுக்கொள்ளுங்கள். அலுவலகவாசிகளின் மிகப்பெரிய சிக்கலே வீட்டுச் சாப்பாடுதான். கேன்டீன், ஹோட்டல் என சாப்பிடும்போது பர்ஸ் காலியாவதோடு வயிறும் பதம் பார்க்கப்படுகிறது. இவர்களை குறி வைத்து வீட்டுச் சாப்பாடு விற்பனையில் இறங்கினால் நல்லது.


மேலும் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிகளின் அருகில் நீங்கள் குடியிருந்தால் கேன்டீன் ஆர்டர்களை பெற்று கேன்டீன்களுக்கு சமைத்து அனுப்பி வைக்கலாம். கல்லூரி ஹாஸ்டல்களில் தங்கி இருந்து படிக்கும் மாணவர்களுக்கும் சமைத்து கொடுக்கலாம்.


இப்படி சிறிய அளவில் ஆரம்பித்து பின் வியாபாரம் பெருக பெருக, ஆர்டர்கள் அதிகரிக்கும் போது பல பெண்களை சம்பளத்திற்கு அமர்த்தி வேலையும் கொடுக்கலாம்.


இந்த தொழில் செய்யும்போது உணவுகளின் விலை நிர்ணயிப்பதில் கவனம் தேவை. உங்கள் உணவின் விலை மற்றவர்களுடன் விலையுடன் ஒத்துப்போக வேண்டும் அல்லது அதை விட குறைவாக இருக்க வேண்டும். சில நேரங்களில் மற்றவர்களின் விலையை விட சற்று கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கண்டிப்பாக மற்றவர்களின் உணவை விட நல்ல தரத்திலும் சுவையாகவும் இருத்தல் வேண்டும். வாங்குவோர்  நல்ல பொருளை சற்று கூட விலைக்கு வாங்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.


இந்த தொழிலில் மிக முக்கிய அம்சம் சுத்தமும் சுவையும்தான். சமைக்கும்போது மிக சுத்தமாக செய்யுங்கள். ஒரு முறை சாப்பாட்டில் ஏதேனும் முடி போன்ற அசுத்தத்தை கண்டுவிட்டால் பின்னர் மக்களுக்கு உங்கள் உணவின் மீது வெறுப்பு ஏற்பட்டு விடும். எனவே கவனமாக செய்யுங்கள்.


அடுத்து ஒரே உணவை தினமும் செய்யாமல் வகை வகையாக அறுசுவை உணவுகளை செய்யுங்கள். உதாரணத்திற்கு, பகல் உணவு சமைக்கும்போது தினமும் வெவ்வேறு மரக்கறிகள், கறிவகைகள், கூட்டு என சாப்பாட்டில் வித்தியாசம் காட்டுங்கள். அதேபோல, இட்லி, தோசைக்கு கொடுக்கும் சட்னியில் கூட விதவிதமாக செய்யுங்கள். வாங்குவோருக்கு சலிப்பு தட்டாது. விரும்பி உண்பர்.