ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் எளிமையான ஆட்சி
ஆட்சிப்பொறுப்பை ஏற்ற, அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு முறை முதுகில் சில துணி மூட்டைகளைச் சுமந்தவர்களாக மதீனாவின் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார்.
அதைக் கண்ணுற்ற அவரின் தோழர் உமர் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘தாங்கள் எங்கு செல்கிறீர்கள்? உங்கள் முதுகில் என்ன மூட்டை?’ என்று வினவினார்கள்.
‘உமரே! கடை வீதிகளில் இந்த உடைகளை விற்று வரச் செல்கிறேன்’ என்றார்கள்.
‘ஏன்? ஆட்சிப் பொறுப்பில் ஆயிரம் வேலைகள் இருக்கும்போது இப்படி வியாபாரம் செய்து தங்களுடைய நேரத்தை வீணடிப்பது எனக்கு நியாயமாகப் படவில்லை’ என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவேசமாக சொன்னார்கள்.
அதற்கு அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘உமரே! பொறுமை கொள்ளுங்கள். நான் ஆட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினால் என்னை நம்பியிருக்கிற குடும்பத்திற்கு யார் பொறுப்பேற்பது? எங்களின் அன்றாடத் தேவைகளை யார் நிறைவேற்றுவது? அதற்காகத்தான் பழைய வியாபாரத்தில் ஈடுபடுகிறேன்’ என்றார்கள்.
பின்னர், ‘இது தீவிரமாகச் சிந்திக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் தீர்க்கப்படவேண்டிய விஷயமாகவும் எனக்குப்படுகிறது. அரசாங்க வேலை செய்வதற்கெனவே ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் உள்ளபோது அதை எப்படித் தாங்கள் மறுக்க முடியும்? ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லிம் அன்னவர்களின் காலத்திலேயே சட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவராக இருந்த அபூஉபைதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அணுகி இதற்கு ஓர் முடிவு செய்வோம்’ என்றார் உமர் (ரலியல்லாஹு அன்ஹு).
பிறகு இருவருமே அபூஉபைதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அணுகினார்கள்.
விவரங்களைக் கேட்டறிந்த அபூஉபைதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,
‘இறைத் தூதுவர் குடும்பத்தினருக்கு ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் ஆகும் என்றாக்கப்படவில்லை. குறிப்பாக அது நபித்தோழர்களுக்காக அதுவும் சிரமப்படும் நபித் தோழர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. எனவே அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மாதாமாதம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு சம்பளமாக எடுத்துக் கொள்ளலாம். வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு தன் சிந்தனை முழுவதையும் அரசுப் பணியில் செலவிடலாம். அதற்குத் தடையில்லை’ என்று தீர்ப்பு சொன்னார்கள்.
சில காலம் சென்றது. ஒரு முறை அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அன்னாரின் துணைவியார் உணவு உண்டபின் சிறிது இனிப்பைஅபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முன் வைத்தார்கள்.
‘என்ன இது இனிப்பு? யார் கொண்டு தந்தார்கள்’ என்று வினவினார்கள் அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.
‘யாரும் தரவில்லை. நானேதான் தயார் செய்தேன். தாங்கள் வழங்கும் அரசு சம்பளப் பணத்திலிருந்து சிறிது சிறிதாய் மிச்சம் பிடித்து இந்த இனிப்பைச் செய்தேன்’ என்றார் துணைவியார்.
‘நான் பெறும் சம்பளம் நம் செலவு போக மிஞ்சும் அளவில் அதிகமாய் இருக்கிறதா? எவ்வளவு என்று சொல்’ என்று கடிந்து கொண்டார்கள் அபூபக்கர் சித்திக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.
அது மட்டுமல்ல அன்றிலிருந்து அந்தத் தொகையை தனது சம்பளத்திலிருந்து குறைத்துக் கொண்டார்கள். அளவிற்கு அதிகமாய்ப் பெற்ற தொகையில் செய்த இனிப்பையும் உண்ண மறுத்துவிட்டார்கள்.
அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றிலிருந்து ஒரு சிறு துளி.
ஆக்கம்- Ahamed Bilal
இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்
இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே
தோள் கொடுத்த
தூய நபி ﷺ
அன்னவர்கள்