www.womanofislam.com

Muslim women's online learning centre

பெண்களை வதைக்கும் வரதட்சணை


​​​இன்று முஸ்லிம்களின் சமூகப் பிரச்சினைகளில் தலையாயதாக விளங்குவது ‘வரதட்சனை’ கொடுமையாகும். இதனால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருமண வயதை தாண்டியுள்ள பல கன்னிப் பெண்கள் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வு இருளடைந்து கொண்டிருக்கிறது.


இஸ்லாத்தில் எவ்வித அடிப்படையுமில்லாத, இஸ்லாமிய திருமணக் கோட்பாட்டுக்கு முரணான, அந்நியக் கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்ட ஒன்றே இச்சம்பிரதாயமாகும். இப்பீடையை உடனடியாகத் தொலைத்துக் காட்டுவது காலத்தின் தேவையாகும். இதற்காக இஸ்லாமிய இயக்கங்கள், பத்திரிகை நிறுவனங்கள், கற்றறிந்த உலமாக்கள், அறிஞர்கள் முன்வர வேண்டும். இதற்கென்றே ஒரு தனியான இயக்கம் எட்படுத்தப்பட்டாலும் அது தவறில்லை. எமது இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய, எதிர்த்து நிற்கவேண்டிய ஒரு சவாலாக இது அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.



திருடுபவன் தன்னை திருடன் என்று சொல்லிக் கொள்வதில்லை: பிறரின் பொருளை வஞ்சமாக அபகரிப்பவன் தன்னை மோசடிக்காரன் என்று சொல்லிக்கொள்ள மாட்டான்: இலஞ்சம் வாங்கியவன் தான் வாங்கிய லஞ்சத்தை வெளியில் சொல்லிக் கொள்வதில்லை: ஆனால் வரதட்சனை வாங்கும் ஒருவனோ அதனை வெட்கங்கெட்டு வெளியில் சொல்லி பெருமைப்படுகிறான். எதில், எதில் பெருமைப்பட வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் காணப்படுகின்றான். அந்தளவு வரதட்சணை சமூக அந்தஸ்து பெற்று உணரப்படாத ஒரு தீமையாக திகழ்கிறது என்பதே பொருள்.


இது உண்மையில் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பதையும் பெண்களுக்கு இஸ்லாம் அளித்துள்ள கௌரவத்தையும், கண்ணியத்தையும் அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஒளியில் பார்ப்போமானால்: 1400 வருடங்களுக்கு முன் அரேபிய சமூகத்திலே ஒருவனுக்கு பெண்குழந்தை பிறந்த செய்தி கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து, சினத்தால் சிவந்து விடுகிறது. அதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.


“அவர்களின் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்ததாக அவனுக்கு நன்மாராயங் கூறினால், அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து, கோபத்தை விழுங்குகிறான். அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைத்து விடுவதா? என்று (கவலைப்பட்டு) சமுதாயத்தினரையும் விட்டும் தலைமறைவாகி விடுகிறான். அவர்கள் (இவ்வாறெல்லாம்) செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா?” (16:58-59)


இவ்வாறு 1400ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு இஸ்லாம் கிடைக்கப் பெறாத ஜாஹிலிய்யா மனிதன் சிந்தித்தானோ அதே சிந்தனையை எமது முஸ்லிம் பெண்களின் பெற்றோரும் சிந்திக்கின்ற நிலைக்கு இந்த சீதனம் கொண்டுவந்து விட்டிருக்கின்றது.

சொத்துரிமை, விவாகரத்துக்குக் கோரும் உரிமை, மறுமணம் செய்யும் உரிமை ஆகியவற்றுடன் மஹர் தொகையைத் தீர்மானித்துப் பெறும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புகளுக்கு ஆளாவது பெண்கள் தான். எனவே தாங்கள் இழக்கவிருக்கும் அழகு, இளமை என்பவற்றை கருத்திற் கொண்டு மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்துள்ளது. மஹர் தொகை பாதுகாப்பானதும், உத்தரவாதமானதும் ஆகும்.


“பெண்களுக்கு அவர்களின் மஹர்த் தொகையை மனமுவந்து வழங்கி விடுங்கள்” (4:4)

என்பது அல்குர்ஆனின் கட்டளை ஆகும். மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்ற வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. ஆனால் இவ்வுரிமையை பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.

​​

இவர்கள் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை ஏற்பட்டு விட்டது. கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்வர்க்கம் கேட்டுப் பெறக்கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டது. ‘வரதட்சனை வாங்காதீர்கள்’ என்பதை விட ‘நீங்கள் கொடுங்கள்’ என்பது இன்றைய ஆண்களின் சுலோகமாக உள்ளது. உண்மையான எந்த முஃ மினும் வரதட்சனை கேட்கத் துணியமாட்டான்.


“உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்கு சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், திருமணம் பார்வையை தடுக்கக்கூடியதாகவும், கற்பைக் காக்கக் கூடியதாகவும் உள்ளது.”

அறிவிப்பாளர்:- இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு

ஆதாரம்:- (புகாரி, முஸ்லிம், திர்மிதி)


எனவே பராமரிப்புச் செலவற்றவர் வரதட்சணையைப் பெற்று திருமணம் செய்யும்படி ஒருபோதும் இஸ்லாம் கூறவில்லை. நான்காம் அத்தியாயம் முப்பத்தி நான்காம் வசனத்தில் குறிப்பிடுவது போன்று, “பெண்ணைவிட ஆண் மேலானவன்” என்று அல்லாஹ் கூறியிருக்க, மஹர் கொடுத்து மணம் முடிக்கப் போகும் பெண்ணிடமே தவறான முறையில் கைக்கூலி கெட்டு, தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்கின்றான். என்ன கேடுகெட்ட அவலநிலை!


இதை விட தரம்கெட்ட நிலையில் சிலர் தன் மகனுடைய கல்வித் தரத்தை வைத்து விலை பேசுகின்றனர். என் மகன் இவ்வளவு பட்டங்கள் பெற்றிருக்கின்றான். ஆகவே என் மகனின் ‘ரேட்’ இவ்வளவு என்று வாய் கூசாமல் கேட்கிறார்கள். ஆனால் இத்தனைக்கும் மத்தியில் அழகிய முறையில் மஹர் கொடுத்து திருமணம் செய்யும் இஸ்லாமிய இளைஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

பகுத்தறிவுள்ள மனிதர்கள் தமது பணத்தாசையால் தன் நிலை மறந்து தன்மானம் இழந்து சந்தைப்பொருளாக தம் பிள்ளைகளை ஆக்கி மனித நாகரீகம் ஏற்காத போக்கில் போய்க் கொண்டிருப்பது நியாயம்தானா? உண்மையில் இத்தாகையவர்கள் மிருகங்களை விடக் கேவலமானவர்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இது உழைக்காமல், அலுக்காமல், சுருங்காமல் கிடைக்கும் பணத்தின் மீதுள்ள பேராசை தான் இந்த இழி செயலைச் செய்ய மனிதனைத் தூண்டுகின்றது.

​​

இன்னும், முஸ்லிம் சமூகத்தை ஆடிப் படைக்கும் காட்டேரியாக மாறிவிட்ட வரதட்சனை, வாங்குவதில் மாத்திரம் நின்று விடாமல், இன்றைய ஆண்வர்க்கம் வெள்ளைத் தோலுக்காய் வீர நடைப்போட்டு அலைக்கின்றார்கள். லட்சத்தோடு வெள்ளைத் தோலிருந்தால் மாத்திரம் போதும் மற்றயதெல்லாம் அடுத்தபடிதான். அவள் எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி. தனக்கு OK. மாறாக இஸ்லாம் கூறும் வழியில் நடக்கும் நல்லொழுக்கம் கொண்ட பெண் தனக்கு மனைவியாக வந்து தன் வாழ்வில் வசந்தம் வீசுவதை அவன் விரும்புவதில்லை. இப்படிப்பட்டவர்கள் அண்ணலாரின் ஸுன்னாவை பின்பற்றாத துரதிஷ்டவாதிகள் என்றே கூற வேண்டும். இதில் கவலைக்குரிய விடயம் என்னெவென்றால், ஒரு சில ஈமான்தாரிகளும் இவ்வெள்ளைத் தோலுக்கு அடிமைப்பட்டு விடுவது தான். எனினும், அவர்களில் தூயமையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

​​

எது எவ்வாறிருந்தாலும், வரதட்சணை, கைக்கூலி வாங்காமல் ‘மஹர்’ கொடுத்து திருமணம் செய்யும் நிலை மீண்டும் எமது சமூகத்தில் உருவானால் எமது சமூகத்திற்கு இதனால் கிடைக்கும் பயன்களும், நன்மைகளும் அளப்பரியனவாக இருக்கும். அதில் திருமண வயதை அடைந்தும் திருமணம்


முடிக்க வசதியில்லாத ஏழைக் குமருகளின் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பது முக்கியமானதாகும்.


எனவே, இஸ்லாத்திற்கு மாற்றமான ‘இப்பித்அத்’ தை ஒழிப்பதில் அணைத்து இயக்கங்களும், ஆலிம்களும் இணைந்து உறுதியாக செயற்பட முன்வருவது இன்றைய காலத்தின் அவசிய, அவசரத் தேவையாகும் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது.


யா அல்லாஹ்! பெண்ணினத்திற்கு எதிராக செயற்படும் இக்கொடுமையை விட்டும் அவர்களைக் காப்பாற்றி இஸ்லாம் காட்டும் திருமணங்கள் நடைபெற அருள் புருவாயாக! ஆமீன்.