www.womanofislam.com

Muslim women's online learning centre

நோய் -அல்லாஹ்வின் அருட்கொடை.


நோய் மூலம் உடலாலும் உள்ளத்தாலும் மனிதன் அடைகின்ற பலாபலன்கள் ஏராளம்.


1. தீமைகள் மன்னிக்கப்படுகின்றன; 
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறுகிறார்கள், "ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு எந்த ஒரு சிறிய சோதனையோ கவலையோ துக்கமோ ஒரு முள் குத்துவதால் வரும் சிறிய வேதனையோ எது வந்தாலும் சரி அதன் மூலம் அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்காமல் விடுவதில்லை."



"ஒரு மூமின் நம்பிக்கையாளன் தன் குடும்பம், குழந்தைகள், தன் செல்வம் இவற்றில் தொடர்ந்து சோதிக்கப்பட்டுக் கொன்றே இருக்கிறான் எனில் அல்லாஹ்வை மறுமையில் சந்திக்கும் போது அவனுடைய வினைப் பட்டியலில் எந்தத் தவறும் இருக்காது." என்றும்

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.



ஒரு முஸ்லிம் பாவங்கள் செய்து அவை மன்னிக்கப்பட அவன் வேறு முயற்சிகள் செய்யாதபோது கவலை, நோய் போன்றவற்றால் அல்லாஹ் அவற்றை மன்னிக்கின்றான்.


எனவே தான் அரபியில் ஒரு பழமொழி கூறப்படுகிறது. “சோதனைகள் மட்டும் இல்லாவிட்டால் மறுமையில் நாம் நன்மைகள் இல்லாதவர்களாக அல்லாஹ்வின் முன் நிற்போம்,”



2. மறுமையில் பன்மடங்கு நன்மைகள்;
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸ் திர்மிதியில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது. “மறுமையில் ஒரு கூட்டத்தினர் இப்படி நினைப்பார்கள். உலகில் வாழ்கின்ற போது தங்களின் உடல்கள் வெந்நீரில் போட்டு கொதிக்க வைக்கப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
காரணம் உலகில் சோதிக்கப்பட்டவர்கள் மறுமையில் கிடைக்கும் நன்மைகளை கண்ணால் காணுகின்ற போது இப்படி நினைப்பார்கள். உலகின் சோதனைகள் மறுமையில் நன்மைகளே.



3. நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம்;
சாதாரண நெருக்கமல்ல மிக அதிக நெருக்கம். மறுமையில் அல்லாஹ் கேட்பான். ஆதத்தின் மகனே, நான் உலகில் பசித்திருந்தேன், தாகித்திருந்தேன், நீ ஏன் உணவளிக்கவில்லை; நீர் புகட்டவில்லை என்று தொடங்கும் ஹதீஸின் தொடரில் “நான் நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை நீ நலம் விசாரிக்க வரவில்லையே” என்று கேட்டு “இன்ன அடியான் நோயாளியாக இருந்தான். அவனை நோய் விசாரித்திருந்தால் என்னை அங்கு நீ கண்டிருப்பாய்” என்று அல்லாஹ் கூறுகிறான்.


இந்த ஹதீஸில் பசி தாகம் பற்றிக் கூறும்போது “எனக்கு நீர் புகட்டியிருப்பாய்’ என்று கூறும் இறைவன், நோய் நலம் விசாரிப்பதைப் பற்றிக் கூறும் போது “என்னையே கண்டிருப்பாய்’ என்கிறான். அந்த அளவுக்கு நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம் இருக்கிறது.



4. பொறுமையின் அளவைத் தெரிந்து கொள்ள;
சோதனைகள் இல்லையெனில் பொறுமையின் சிறப்பு வெளியே தெரியாது. பொறுமை எல்லா நன்மையையும் கொண்டு வரும்.


“அதிக நற்கூலி அதிக சோதனைகளில் உள்ளது. எவரை அல்லாஹ் சோதிக்கின்றானோ அவர்களை அல்லாஹ் அதிகம் நேசிக்கின்றான். யார் சோதனைகளைப் பொறுத்தாரோ அவரை அல்லாஹ்வும் பொருந்திக் கொள்கிறான். அவற்றைக் கண்டு கோபப் படுகின்றவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுகிறான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறுகிறார்கள்.



5. உள்ளத்தால் இறைவனைத் தடுத்தல்;
அல்லாஹ்வை மறந்து அவனிடம் துஆ எதுவும் கேட்காமல் ஓர் அடியான் இருந்தால் அவனை சோதிக்க நோயை கொடுக்கின்றான் அல்லாஹ்.


நோய்வாய்ப்பட்டவன் இறைவனை அதிகமாக நினைப்பதை நாம் கண்கூடாகக் காண்பதுண்டு. தன்னிடம் கேட்பதை இறைவன் அதிகம் விரும்புகின்றான்.



“அவனை ஏதாவது ஒரு தீங்கு தொட்டாலோ நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத்தொடங்குகிறான்.” (குர்ஆன் 41;51)



“நீண்ட நெடிய இறைஞ்சுதல்கள்’ என்று அல்லாஹ்வே கூறுவதைக் கவனியுங்கள். ஏதோ படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அப்போதுதான் உணர்ந்தவன் போல் ஆகி விடுகின்றான். சோதனைகளின் போதுதான்” தான் அல்லாஹ்வின் அடிமை’ என்ற உணர்வு ஏற்படுகிறது.



அல்லாஹ்வின் பக்கம் சிலர் அதிகம் நெருக்கமாக என்ன காரணம் என்று ஆராய்ந்தால் சோதனைகள்தான் காரணம். சில நோயாளிகள் குணமான பின்பு தொடர்ந்து தொழுவதையும் மார்க்கத்தைப் புரிய முயல்வதையும் நாம் கண்ணால் பார்க்கிறோம். நோய் தந்த நன்மைதான் இது.



6. பெருமை. கர்வம், தலைக்கனம் தகர்க்கப்படுகின்றன;
இவை ஒருவனிடம் குடிகொள்ளும் போதுதானே தலைகால் தெரியாமல் ஆடுகிறான். நோயை அவனுக்குக் கொடுக்கும் போது பசித்திருக்கின்றான். உடல் வேதனையை அனுபவிக்கின்றான். அதற்காக யாரிடமும் கோபப்பட முடிவதில்லை. உள்ளம் உடைந்துபோய்.. பெருமை, கர்வம் பறந்துபோய் விடுகிறது.



“உள்ளங்கள் உடைந்து போனவர்களுடன் நான் இருக்கிறேன்” எனும் அல்லாஹ்வின் வாக்கும்” அநீதி இழைக்கப்பட்டவன், பயணி, நோயாளி ஆகியோரின் பிரார்த்தனைகள் உடனே ஏற்றுக் கொள்ளப்படும்’ எனும் நபி மொழியும் ஒரே கருத்தையே வலியுறுத்துகிறது. இவர்களும் உள்ளம் உடைந்தவர்கள்தானே. பாதிப் பாலும் பசியாலும் பயணத்தாலும் நொந்து நூலாகிப் போனவர்கள்தானே. எனவே தான் இவர்களின் பிரார்த்தனையை இறைவன் உடனே ஏற்றுக் கொள்கிறான்.