www.womanofislam.com

Muslim women's online learning centre






மனைவியை காதலியுங்கள்


திருமணம் எனும் பந்தத்தின் மூலம் நீங்கள் பெறுவது ஒரு மனைவியை மட்டும் அல்ல. வாழ்வின் நீண்ட பயணத்திற்கான ஒரு வழித்துணையையும்தான்! இன்பத்திலும், துன்பத்திலும் உங்களோடு அனைத்திலும் பங்கு கொள்ளும் ஒரு பங்காளியை! நீங்கள் ஏற்றம் பெற உங்களுக்கு கை தந்து உதவும் ஒரு உற்ற தோழியை! உங்கள் கஷ்டங்களின்போது உங்களுக்கு நிழல் தரும் ஒரு போர்வையை!


கணவன் மனைவி உறவைப்பற்றி இறைவனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனையை அல் குர்ஆனில் பாருங்கள்!

“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).


எவ்வளவு யதார்த்தமான வர்ணனை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றன. மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. அதேபோன்றுதான், நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி.


நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.


உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மந்திரி.


சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.


ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும், முடிவிலும் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!


மனித வாழ்க்கையின் இந்த உறவு மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணம் என்ற பந்தத்தின் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை.


இந்த நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் உருவாக கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது.


மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).


திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.


அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும். உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.



எனவே, நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.


தம்பதியர் இணங்கி இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.

ஒரு சிறந்த கணவராக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தமது மனைவிமார்களோடு எப்படி வாழ்ந்தார்கள் என்பது மட்டும் போதும் ஒரு மனிதனுக்கு வழி நடக்க சிறந்த வழிமுறை.


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள். தங்களது மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை பாலைவன வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா வென்றார்கள். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வென்றார்கள்.


மேலும் தங்களது மனைவியை வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.


நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:


“அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும் உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.”


ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களாயினும் சரியே. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?


உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை இந்த முறைகளில் அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.


அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.


எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.


“உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.”


இறுதியாக,


உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.


நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.


அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுவதை பாருங்கள்:


நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). சூரா அல்-ஜுக்ருஃப் 43:70


இந்த வசனத்தை உண்மையாக்க பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிறந்த முறையில் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்.


இருபத்தி ஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது அவர்கள் கொண்ட காதலுக்கு நிகர் எதுவுமில்லை. அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலத்திற்கு பின்பும் அன்னையாரின் குடும்பத்தினரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.


தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.


மாஷா அல்லாஹ்! எப்படிப்பட்ட அன்பு. எந்தளவு தூய தாம்பத்தியத்தை அழகாக வாழ்ந்து காட்டி உள்ளார்கள். இது ஒவ்வொரு மனிதரும் பின்பற்றி நடக்க வேண்டிய வழிமுறை அல்லவா.


எனவே உங்களுக்கு முன் உங்கள் மனைவி இறந்து விட்டால் அவளுக்காக நீங்கள் நன்மையான காரியங்களை, தர்மங்களை செய்யுங்கள். ஏழைகளுக்கு உணவளியுங்கள், குர்ஆன் ஓதுங்கள், அவள் ஹஜ் செய்து இருக்கவில்லை என்றால் அவளுக்காக ஹஜ் செய்யுங்கள். இப்படி செய்யும் நன்மைகளை எல்லாம் அவளுக்கு அனுப்பி வையுங்கள். ஒவ்வொரு நாளும் அவளுக்காக பிரார்த்தியுங்கள். இவை எல்லாம் உங்கள் உண்மை அன்பின் அடையாளச் சின்னங்கள்.


அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்விலும் நிச்சயம் அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு.