இல்லறத்தில் முன் மாதிரி
அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மஸ்ஜிதே நபவிய்யில் அமர்ந்துத் தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அதுசமயம், ஸல்மான் ஃபார்ஸீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அங்கு வந்து, அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் தங்கள் அருமை மகளார் ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அன்னவர்களின் வீட்டின் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது,” என்று கூறினார்கள்.
உடனே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தம் மகளார் வீட்டிற்கு விரைந்தார்கள். வீட்டில் ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தம் மகளாரிடம் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார்கள்.
மகளார் “அன்புள்ள தந்தையே! நானும் எனது கணவரும் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம்: விளையாட்டு வினையாகிவிட்டது. பேச்சினூடே என் கணவர் “இன்னன் னிஸாஅ ஷயாத்தீனுன் குலிக்ன லனா – நஊதுபில்லாஹி மினஷ்ஷர்ரிஷ்ஷயாதீனி” “பெண்கள் ஷைத்தான்களாவர்: உங்களை எங்களுக்குகாகப் படைக்கப்பட்டது: நாங்கள் அந்த ஷைத்தான்களின் தீங்கை விட்டும் அல்லாஹ் விடத்தில் காவல் தேடுகிறோம்” என்று கூறினார்கள்.
உடனே நான், “இன்னன்னிஸாஅ ரயாஹீனுன் குலிக்ன லக்கும் ஃபகுல்லுஹும் தஷ்தஹீ ஷம்மர் ரயாஹீனி” “நிச்சயமாகப் பெண்கள் ரைஹான் இலைகளைப் போன்றவர்கள்: அவர்களை உங்களுக்காகப் படைக்கப்பட்டது: நீங்கள் எல்லாம் ரைஹான்களை முகர்ந்திட ஆசைப்படுகின்றீர்கள்” என்று பதில் கூறினேன்.
இச்சொல் என் கணவரின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது. உடனே அவர்கள் வீட்டை விட்டும் புறப்பட்டு விட்டார்கள்: எனவே தான் அழுது கொண்டிருக்கிறேன்:”
மகளாரின் மொழி கேட்டு அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மருமகன் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைத் தேடித் புறப்பட்டார்கள். கடைவீதி, பள்ளி வாசல் முதலிய இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், ஜன்னத்துல் பகீஉ, என்னும் கப்ருஸ்தானில் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கண்டார்கள்.
அது சமயம் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ஒரு பாழடைந்த கப்ரில் ஓர் ஈச்சம்மரத்தின் கீழ், தலைக்கு மண் கட்டி ஒன்றை வைத்தவர்களாக, ஆழ்ந்த சிந்தனையில் படுத்திருந்தார்கள்.
வீட்டில் அமைதி குலைந்து விட்டால் மண வாழ்க்கையும் மண்ணறை போன்றுதானே!
அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அன்னவர்களின் அருகில் சென்று, “யா அபுத்துராப், கல் என்ன சொல்கிறது?” எனக் கேட்டார்கள். அண்ணலாரின் குரல் கேட்டு துள்ளியெழுந்தார்கள் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.
அவர்களைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டின் வாயற்படியருகே வந்து “அஸ்ஸலாமு அழைக்கும் யா ஃபாத்திமா! உனது தந்தையும், கணவரும் வந்திருக்கிறோம். உள்ளே வரலாமா? என அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே சென்றார்கள்.
தமது மகளாரை விளித்து, “மகளே! உனது பேச்சால் புண்பட்டு போயிருக்கும் உன் கணவரிடம் மன்னிப்புக்கேள்” என்றார்கள். பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் தனது ஆருயிர் கணவராம் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.
தமது மகளைப் பார்த்து “மகளே உன்னுடைய கணவர் உன் மீது அதிருப்தி கொண்ட நிலையில், உனக்கு மரணம் நேரிட்டிருக்குமாயின் நீ சுவனத்தின் மணத்தைக் கூட முகர்ந்திருக்க முடியாது போயிருப்பாய்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்” எனக் கூறிவிட்டுச் சென்றார்கள்.
சகோதர, சகோதரிகளே! சிந்தித்துப் பாருங்கள்,
இதில் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன.
♣ கணவன், மனைவி இருவரும் பேசும் போது வார்த்தைகளை மிக ஜாக்கிரதையாக பேச வேண்டும். அளவுக்கு அதிகமான கேலி பேச்சுகள் குடும்ப வாழ்வை சீர் குழைத்து விடும்.
♣ கணவன், மனைவி இருவருக்கும் சண்டை சச்சரவுகள் வரும் போது குடும்பத்தின் பெரியவர்கள் தலையிட்டு பேசி பிரச்சினைகளை தீர்த்து விடுவது சிறந்தது.
♣ இதே போன்று சிறு சிறு மனஸ்தாபங்கள் வரும் போது அதை பெருதுபடுத்தாமல் பொறுமையோடும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பது மிக முக்கியம்.
அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களோ எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த காரணத்தால், சுவர்க்கத் தலைவி என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்தும், தனது மகளாரின் தவறுகளை ஒப்புகொள்லாமல், மணாளரிடம் மன்னிப்புக்கேட்கச் செய்து, அவ்விருவரின் வாழ்க்கையயும் மணமுள்ள வாழ்க்கையாக மாற்றி அமைத்து நமக்கும் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்திடவேண்டும்.
கணவன், மனைவி உறவில் தவறுகள் உணரப்படும் போது அவை மன்னிக்கப்படுகின்றன. அப்போது ஊடலிலும் கூடலிலும் அன்பு வளர்க்கப்படுகிறது.
இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்