www.womanofislam.com

Muslim women's online learning centre

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமழான்


புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பெரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமழான் மாதம் தான். அந்த மாதத்தை அடைவதற்கு இன்னும் 50 க்கும் குறைவான நாட்களே இருக்கின்றன.


இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி மூன்று பிரிவுகளாக பிரித்து தன கருணையை அடியார்கள் மீது அள்ளி வளங்குகுகிறான்.


இக்கண்ணியமிக்க புனித மாதத்தின் முப்பது நாட்களைப்பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள். ரமழானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும் நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவ மன்னிப்புக்குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் (அறிவிப்பவர்: ஸஹ்ல் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு குஜைமா)


மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லாத் தருணங்களிலும் அனைத்து விதமான நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் அருள், இறை கருணை, மற்றும் பாவமன்னிப்பை அள்ளித்தருகின்ற இப்புனித மாதத்தில் ஒரு இறை நம்பிக்கையாளரின் சிந்தனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுகின்ற நோக்கத்துடன் எந்த ஒரு நன்மையை செய்தாலும் அது பர்ளுக்கான அந்தஸ்தை பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்கு.


எனவே நன்மைகளை அதிகமாக ஈட்டுவதில் முனைப்புடன் செயலாற்றி முதல் பத்தில் அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக்கொள்வதுடன் இரண்டாவது பத்தில் அதிகமாக பாவமன்னிப்பு கோர வேண்டும்.


நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிராத்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன் (நூல்: புகாரி) என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சொல்கிறார்கள் என்றால், நோன்பாளிகளாக இருக்கும் நாம் நம் தேவைகளை அவனிடம் முன் வைக்கின்ற போது இறை அருளாலும், நோன்பின் பரக்கத்தாலும் அல்லாஹ்வே நேரிடையாக அடியார்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். அது மட்டுமல்ல அடியார்கள், சிறிய பெரிய தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது தன கருணையினால் மன்னிப்பையும் வழங்குகிறான்.


இறைவன் கூறியதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறுகிறார்கள்:

“ரமழானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்ப்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” (நூல்: புகாரி) என்றும்


“ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்ப்பார்த்தும் நோன்பு நோட்கிரவனின் முன் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது.” (நூல்:புகாரி) என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சொல்கிறார்கள். நம் அனைவருக்கும் இந்த வருடத்திற்கான நோன்பின் நன்மைகளை அடைவதற்கான பாக்கியத்தை அல்லாஹ் தருவானாக. ஆமீன்