www.womanofislam.com

Muslim women's online learning centre

அடுத்தவர்களையே அலசி ஆராயாதீர்கள்


​​​இன்று நம் சமுதாயத்தில் இருக்கும் ஒரு அசிங்க நிலை மற்றவர்களின் வாழ்க்கையையே அலசி ஆராய்வது. தன் நிலை பற்றியோ தன் குடும்பத்தின் நிலை பற்றியோ சிந்திக்காமல் அடுத்தவர்கள் வாழ்க்கையை எந்த நேரமும் துருவி துருவி ஆராயும் ஒரு கூட்டம் நம் சமுதாயத்தில் இருக்கிறது. அதிலும் பெண்கள் இந்த விசயத்தில் ஒரு படி மேலே நிற்கிறார்கள்.

​​

ஒரு வீட்டில் திருமண பேச்சு வார்த்தை நடக்கும் போது அதை பற்றி அலசி ஆராய்வது, கணவன் மனைவிக்குள் நடக்கும் குடும்ப பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து ஆராய்வது, அதை கொண்டு சந்தோஷப்படுவது இதுவே இவர்களின் பொழுது போக்காக இருக்கிறது.


அதுமட்டும் அல்ல. தான் ஆராய்ந்து எடுத்த அடுத்தவர்களின் தகவல்களை மற்றவர்களுக்கு கூறி அதை பற்றி விமர்சிப்பதும் இவர்கள் செய்யும் மிக மோசமான கேவலமான வேலையாகும். இவர்கள் துப்பறிவுகாரர்களை விட திறமையானவர்கள். அடுத்தவர்களின் விஷயத்தை அலசும் இவர்கள் தன் விஷயத்தை வெளியே மூச்சு விடுவதில்லை. தனக்கோ அல்லது தன் குடும்பத்தில் ஏதாவது நடந்து விட்டால் அதை மூடி மறைத்து மழுப்பி விடுவார்கள். தன் முதுகில் அழுக்கை வைத்து கொண்டு பிறரின் அழுக்கை தேடுபவர்கள் இவர்கள்.


இப்படிப்பட்ட பெண்கள் தான் செய்யும் இந்த கேவலமான வேலையால் அடுத்தவர்களின் மனம் புண்படுமே, அவர்களை நோவிக்குமே என்று கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இவர்களின் வாழ்க்கையில் எந்த சிறப்பும் அபிவிருத்தியும் இருக்காது. ஏன் என்றால் இவர்கள் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் பொருத்தமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளனர். மற்றவர்களின் பிரச்சினையை பார்த்து சந்தோசப்படும் இவர்கள் இன்னும் உணரவில்லை, இவர்களை நோக்கி அல்லாஹ் இதை விட பல மடங்கு வேதனை தரக்கூடிய பிரச்சினையை தண்டனையாக அனுப்பி கொண்டுள்ளான் என்பதை.

​​

எனவே, சகோதரிகளே, இவர்களை போன்றவர்களிடம் மிக அவதானமாக நாம் இருக்க வேண்டும். இவர்களுடன் எந்த தொடர்புகளையும் வைத்துக்கொள்ள கூடாது. இவர்கள் மற்றவர்கள் பற்றி நம்மிடம் வந்து சொன்னால் அதற்கு செவி சாய்த்து ஆமோதித்து அவர்களுக்கு இன்னும் உற்சாகம் அளிக்க கூடாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களிடம் மற்றவர் விசயம் நமக்கேன் என்று கூறி இவர்களை விட்டும் ஒதுங்கி விட வேண்டும்.


இன்று மற்றவரை பற்றி உங்களிடம் சொல்பவர்கள், நாளை உங்களை பற்றி மற்றவரிடம் சொல்ல மாட்டார்களா?​